Tuesday, May 9, 2017

முக்திநாத் யாத்திரை – 1.



முக்திநாத் கோவில் வாசலில் 
நானும் என் கணவரும்

2015ம் ஆண்டே முக்திநாத் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் ஏப்ரல் 2015ல் நேபாளத்தை உலுக்கிய நில நடுக்கத்தை நினைத்து கொஞ்சம் நடுங்கித்தான் இருந்தோம்.   ஆனால் இந்த வருடம் எப்படியும் முக்திநாத் யாத்திரை சென்று விட வேண்டும் என்று (நான் இல்லை, என்னவர்தான்) முடிவு செய்து வலைத்தளத்தில் தேடித் தேடி யாத்திரைக்கு ஏற்பாடு செய்து விட்டார் NEPAL PILGRIM TRAVEL. MYLAPORE என்ற TRAVELS மூலமாக.

எங்களுடன் யாத்திரையில் கலந்து கொள்ளப் போகிறவர்களின் பட்டியலில் இருந்து நாங்கள் மூன்று தம்பதிகள் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்யப்போகிறோம் என்பது தெரிய வந்தது.

ஏப்ரல் 4ம் தேதி விடியற்காலை 3 மணிக்கு எங்கள் மகன் எங்களை சென்னை விமான நிலையத்தில் விட்டு விட்டுச் சென்றான்.   சென்னை விமான நிலையத்திலேயே ஒரு இன்ப அதிர்ச்சி.  எங்களுடன் பயணித்த திருமதி சுசீலாவும் (மருத்துவர்), நானும் 6, 7, 8 மூன்று வகுப்புகளும் ஒரே பள்ளியில் படித்திருக்கிறோம் என்று.  அப்புறம் என்ன ஒரே மலரும் நினைவுகள்தான்..   


நானும், என்னுடன் 6, 7, 8 வகுப்புகளில் ஒரே பள்ளியில் படித்த திருமதி சுசீலாவும் (மருத்துவர்).

காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து INDIGO விமானத்தில் கிளம்பி 750க்கு தில்லி சென்று சேர்ந்தோம்.    ஜெட் ஏர்லைன்சில் சென்றிருந்தால் பன்னாட்டு விமான நிலையத்திலேயே தரை இறங்கி இருக்கலாம்.   இல்லாததால் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமான நிலையப் பேருந்தில் சென்றோம்.  இதற்கு ஒன்றும் தனி கட்டணம் இல்லை.  BOARDING PASSஐ காண்பித்தால் இலவச பயணச் சீட்டு தருகிறார்கள்.  இலவசம் என்று சொல்வதற்கு இல்லை.  அதுதான் சென்னையிலிருந்து காட்மண்டுவிற்கு ஒருவருக்கு பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோமே பயணக்கட்டணமாக. 




தில்லி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்த புத்தர் சிலை முன்னும், பின்னும்

மல்லிகையே, மல்லிகையே மயக்கும் மல்லிகையே.

பன்னாட்டு விமான நிலையத்தில் CHECK IN செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது எனக்கு முன்னே நின்று கொண்டிருந்த ஈராக்கை சேர்ந்த பெண்மணிகள் என் தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூவின் மணத்தை சிலாகித்து என்னுடன் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  மேலும் அவர்களின் இந்தியப் பயணத்தைப் பற்றியும் குறிப்பாக சென்னையைப் பற்றியும் மிக்க மகிழ்ச்சியுடன் பேசினார்கள்.   நம்ப அருமைதான் நமக்குத் தெரியாதே.    
அங்கு CHECK IN செய்து விட்டு கையுடன் கொண்டு சென்றிருந்த சப்பாத்தி, தக்காளித் தொக்கை சாப்பிட்டுவிட்டு (தமிழன் டா,  நமக்கு சாப்பாடு முக்கியமாச்சே, அதுவும் வீட்டுச் சாப்பாடு) காத்திருந்தோம்.  1150க்கு கிளம்பி 1330க்கு காட்மண்டு சேர வேண்டிய விமானம் 1310க்கு காட்மண்டுவை சென்றடைந்தது.   வெளியே வந்து எங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கும் சாரதியையும், வண்டியையும் கண்டு பிடித்து ஏறி அமர்ந்தோம்.   ம்ம்ம்.  ஆனால் மகிழுந்து(!) கிளம்பிய பாடு இல்லை.  இன்னும் மூன்று பேர் சென்னையில் இருந்து மும்பை வழியாக வருகிறார்கள்.  அவர்களையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்பது அந்த சாரதிக்கு இடப்பட்ட கட்டளை.  அதற்கு அவர் என்ன செய்ய முடியும்.  உடன் வந்தவர்கள் என்ன திட்டியும், சத்தம் போட்டும் கல்லுளி மங்கனாக இருந்தார்.  TOUR MANAGERக்கு

தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பயனில்லை.  ஒரு வழியாக 415க்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.  அவர்களுடன் பயணித்தவர்களின் உடைமைகள் வந்து சேர்ந்து விட, இவர்களது மட்டும் வரவில்லையாம்.  அவர்கள் விமான நிலையத்தில் உள்ளே தவிக்க, நாங்கள் வெளியே வெயிலில் காத்துக் கொண்டிருந்தோம்.  ஒரு வழியாக HOTEL MAHADEV சென்று அடைந்தோம். 

அன்று இரவிலிருந்து தான் TRAVELS COMPANY ஏற்பாடு செய்த சாப்பாடு. எனவே HOTEL MAHADEV ல் மதிய உணவை (எங்கள் செலவில்) மாலை சாப்பிட்டோம்.    கால் மணி நேரத்தில் உடனே கிளம்ப வேண்டும் சுயம்புநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.  
   

தொடரும்……..

17 comments:

  1. முதல் படத்தில் சிகப்புக் கோட்டுடன் + அருமை ஆத்துக்காரரின் அரவணைப்புடன் நிற்பது ஜோர் ஜோர் !

    ReplyDelete
    Replies
    1. அது கோட்டு இல்லை அண்ணா. ஸ்வெட்டர். குளிரில் 108 தீர்த்தத்தில் குளித்து விட்டு நடுங்கிக் கொண்டே இருந்தோம்.

      Delete
  2. //எங்களுடன் பயணித்த திருமதி சுசீலாவும் (மருத்துவர்), நானும் 6, 7, 8 மூன்று வகுப்புகளும் ஒரே பள்ளியில் படித்திருக்கிறோம் என்று. அப்புறம் என்ன ஒரே மலரும் நினைவுகள்தான்.. //

    ஆஹா, மிக்க மகிழ்ச்சி. எங்கு போனாலும் உங்களுக்கு என்று சில ஆட்கள் அமைந்துவிடுகிறார்கள். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட மச்சங்கள் இருக்கும் போலிருக்குது.

    இது என்னைப் போல சிலருக்கு மட்டும் வெறும் வெட்டி மச்சமாக உள்ளது. அதில் அதிர்ஷ்டம் இருப்பது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

      நாங்கள் பெங்களூர் சாமுண்டீஸ்வரியை தரிசிக்கப் போனபோது ஒரு பெண் “ஜெயந்தி எப்படி இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

      அது என்னமோ எங்கே சென்றாலும் யாராவது வந்து என்னை குசலம் விசாரிப்பார்கள். அப்படி இல்லாவிட்டால் என்ன நாம புது நட்பை பிடிச்சிடுவோமே.

      Delete
  3. //இலவசம் என்று சொல்வதற்கு இல்லை. அதுதான் சென்னையிலிருந்து காட்மண்டுவிற்கு ஒருவருக்கு பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோமே பயணக்கட்டணமாக.//

    பாதயாத்திரையாகவே போயிருந்தால் 18000*2=36000 மிச்சமாகி இருக்கும். :)))))

    ReplyDelete
    Replies
    1. //பாதயாத்திரையாகவே போயிருந்தால் 18000*2=36000 மிச்சமாகி இருக்கும். :)))))//

      அப்புறம் எப்ப வந்து பதிவு போடறது. ரெண்டு பேரும் பாதயாத்திரையா போயிட்டு வரதுக்குள்ள குடு, குடு கிழமாகிடுவோமே.

      Delete
  4. புத்தர் சிலை முன்னும் பின்னும் இன்று புத்த பூர்ணிமாவில் காட்டி அசத்தியுள்ளீர்கள். அதுவும் என்னவோ சிறப்பாகத்தான் இருக்கும் புத்தமதத்தைச் சேர்ந்தோருக்கு,

    ReplyDelete
  5. சித்ரா பெளர்ணமி என்ற நல்ல நாளில் இந்தப் பயணக் கட்டுரையைத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  6. மல்லிகையே, மல்லிகையே மயக்கும் மல்லிகையே .....

    மணம் (மனம்) வீசும் மல்லிகையுடன் கூடிய உங்கள் கூந்தலை முகரும் பாக்யம், இலவசமாக, அந்த ஈராக் பெண் குட்டிகளுக்குக் கிடைத்துள்ளது மிகவும் அதிர்ஷ்டம்தான்.

    நரி முகத்தில் விழித்துவிட்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை அவங்களுக்கு தமிழ் தெரியாது. குட்டி கிட்டின்னா மலைக்கோட்டையில வந்து குண்டு போட்டுடப் போறா

      Delete
  7. சுயம்புநாதர் கோயிலைப் பற்றி அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் .... தொடரட்டும்.

    ReplyDelete
  8. நல்லபடியாக எங்களை முக்திநாத்திற்கு அழைத்துப் போவீர்கள் தானே?

    இராயசெல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
    Replies
    1. அட! கரும்பு தின்ன கூலியா

      தாராளமா அழைச்சுண்டு போறேன்.

      Delete
  9. உங்களது அனுபவமும் வர்ணனையும் முக்திநாத் பயணம் மேற்கொள்ளத் தூண்டுகிறது.

    ReplyDelete