Wednesday, December 31, 2014

வைகுண்ட ஏகாதசி



மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது.

நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.




ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும், மகிழ்ச்சியடைந்த ரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ரங்கநாதரும் அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

இன்னொரு தகவல்

கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலை தூக்கும்; தர்மம் நிலை குலையும்; பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

உடனே பெருமாள் சொன்னார்: ‘‘கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும், வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


பெரும்பாலான வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

வைணவக் கோயில்களில் ஏகாதசி திதியை கணக்கிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், புதுக்கோட்டையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருக்கும் திருமயம் திருத்தலத்தில் ஏகாதசி திதியையொட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.


புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் சன்னிதி என்று தனியே கிடையாது. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு ‘முக்கோடி பிரதட்சண வாசல்’ திறப்பு விழா நடைபெறும். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடாஜலபதியைத் தரிசித்த பின்னர் வெளியில் வந்தால் காணப்படும் பிரகாரத்தை ‘விமான பிரதட்சண பிரகாரம்’ என்பார்கள்.

இந்த பிரகாரத்துக்கும் வேங்கடவன் அருள்புரியும் மூலஸ்தானத்துக்கும் நடுவில் ஒரு பிரகாரம் உள்ளது. இது திருமலையில் மட்டுமே உள்ள அபூர்வமான பிரகாரம். இப்பிரகாரத்தை வலம் வந்தால் மகா புண்ணியம் கிட்டும். வேங்கடவனைத் தரிசித்து, வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்நபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை உள்ளது. இதற்கு இடப்பக்கம் ஆரம்பித்து, மூலவரான வேங்கடாசலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்தை அடைகிறோம். இப்பகுதி, ‘முக்கோடி பிரதட்சண பிரகாரம்’ ஆகும்.

இந்தப் பிரகாரம் வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமிரத் திருநாள் முதல் துவாதசி திருநாள் வரை திறந்திருக்கும். திருமலையில் முக்கோடி பிரதட்சணம், சொர்க்க வாசலுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை ‘விருச்சிக ஏகாதசி’ என்று போற்றுவர். குருவாயூர் கோயிலில் இந்த விழாவை பதினெட்டு நாட்கள் கொண்டாடுவர். இதையொட்டி தீபஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சொர்க்க லோகம்போல் கோயில் காட்சி தரும். மேலும் ஏகாதசியன்று அதிகாலை 3-30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும்.

விருச்சிக ஏகாதசியையொட்டி, அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்கவாசல் வைபவத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலையில் 4-15 மணிக்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், சில கோயில்களில சொர்க்க வாசல் கிடையாது; ஆனால், வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீ காட்ச பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. அங்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

ஒன்று ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்; மற்றொன்று தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். எனவே, இங்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி கிடையாது. ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜர் அவதரித்ததால், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில், நித்ய சொர்க்க வாசல் திருத்தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள் வார்கள்.

அவ்வேளையில் சொர்க்க வாசல் திறப்பதுபோல் இங்குள்ள மணிக்கதவை (சன்னதிக் கதவை) திறப்பர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணம் ரங்கநாதர் கோயிலில் தைப் பொங்கல் அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சாஸ்திர சம்பிரதாயப்படி வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.











அனைவருக்கும் 
இனிய ஆங்கில புத்தாண்டு 
நல் வாழ்த்துக்கள்.

Sunday, December 21, 2014

ஆலய தரிசனம்

இந்த முறை அனுமன் ஜெயந்தி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள்.


காலையில் மேடவாக்கம் BHEL நகர் ஆஞ்சனேயர் கோவிலில் வடை மாலை, அர்ச்சனை, தரிசனம்.

பிறகு எங்கள் வீட்டு ஆஞ்சனேயருக்கு பூஜை. 






அதன் பிறகு கீழ்க்கட்டளையில் உள்ள 
ஸ்ரீ வீராஞ்சனேய, ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆஞ்சனேயர், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் தரிசனம்.  அந்தக் கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள்.













Saturday, December 20, 2014

அஞ்சனை மைந்தன் அவதரித்த நன்னாள்

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றை தாவி


அஞ்சிலே ஒன்று ஆறு ஆக


ஆருயிர் காக்க ஏகி


அஞ்சிலே  ஒன்று பெற்ற


அணங்கைகண்டு  ; அயலான் ஊரில


அஞ்சிலே ஒன்று வைத்தான்


அவன்  நம்மை அளித்து காப்பான் 



ந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான லங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்  என்பது இதன் பொருள். 



மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன்.
இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு.
இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார்.
இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும்.

இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார். தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம்.


பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.
ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,. எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார். சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.தூத்துக்குடி அருகில் உள்ள தெய்வச் செயல்புரம் என்ற ஊரில் 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு. அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்


என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் "அனுமன் சாலீஸா” பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை.அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர்.


ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

ராமாயண கதாநாயகன், ராமனின் வலது கையான அனுமான் மார்கழி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் இவர். இவருக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பெயர்கள் உண்டு. ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார். சீதையை மீட்டுக் கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்ய முடியாத, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக்கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரியசெயல்களைச் செய்தார்.அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாகச் சொன்னதேஇல்லை. நான் ராமனின் தூதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன் என்று சொன்னவர். ராமனுக்குத் தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் அனுமனால் கிடைத்தது. கண்டேன் சீதையை என்று சொல்லி ராமனுக்கு மகிழ்ச்சியளித்தவர். நல்ல செய்தியை ராமனுக்குச் சொன்னதால் சொல்லின் செல்வன் ஆனவர். இவராலேயே வாலியின் மகன் அங்கதனுக்கு முடிசூட்டப்பட்டது. ராவணனின் அழிவுக்குப்பின், அனுமனால் விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ, ராமனிடம் எதுவும் கேட்கவே இல்லை. சீதை அவனுக்குக் கொடுத்த முத்துமாலையைக்கூட அவன் பரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். இதைக் கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை எப்படி நான் திரும்பச் செலுத்துவேன். எப்போதும் உனக்கு நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். என்னைப் போன்றே உன்னையும் மக்கள் போற்றி வழிபடுவர். எனது கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உனக்கு சந்நிதி இருக்கும். முதலில் உன்னை வணங்கியபின்னரே, என்னை வழிபாடு செய்யவேண்டும் என்றெல்லாம் வரம் தந்து மகிழ்ந்தார். அனுமன் கடலைத் தாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறான். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என்று, அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம் பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்று பதில் சொன்னார். இதுதான் அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு. சாதாரணச் செயலை செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். வெண்ணெய், உளுந்துவடை பிரசாதமாகப் படைத்து வழிபடவேண்டும். ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்.

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

ராமபக்தி ஏற்படுவதற்கு ஒரு சுலோகம்

தீனஜனாவன ஸ்ரீராம, தானவஹரண ஸ்ரீராம

தீனாபிமான ஸ்ரீராம, மீனசரீர ஸ்ரீராம

நிர்மல ஹிருதய ஸ்ரீராம, கார்முகபாணே ஸ்ரீராம

கர்மபலப்ரத ஸ்ரீராம, கூர்மாவதார ஸ்ரீராம

ஸ்ரீகரஸுகுண ஸ்ரீராம, ஸ்ரீகரலாலித ஸ்ரீராம

ஸ்ரீகருணார்ணவ ஸ்ரீராம, ஸுகரரூப ஸ்ரீராம

ஸரஸிஜநயன ஸ்ரீராம, ஸுகரரூப ஸ்ரீராம

நரவரவேஷ ஸ்ரீராம, நரஹரிரூப ஸ்ரீராம

காமிதபலதா ஸ்ரீராம, பாமர தூர ஸ்ரீராம

ஸாமஜவரத ஸ்ரீராம, வாமனரூப ஸ்ரீராம

அகதிமிராதித்ய ஸ்ரீராம, விகளிதமோஹ ஸ்ரீராம

ரகுகுலதிலக ஸ்ரீராம, குசலத சதுர ஸ்ரீராம

குசலவனஜக ஸ்ரீராம, குசலத சதுர ஸ்ரீராம

தசமுகமார்த்தன ஸ்ரீராம, தசரததனய ஸ்ரீராம

கலிமல ஹரண ஸ்ரீராம, ஜலஜபவார்ச்சித ஸ்ரீராம

ஸலலித வசன ஸ்ரீராம, ஹலதரரூப

ஸித்தஜனப்ரிய ஸ்ரீராம, ப்ரஸித்த சரித்ர ஸ்ரீராம

பத்தஸுனப்ரிய ஸ்ரீராம, புத்தாவதார ஸ்ரீராம

ஜயகரநாம ஸ்ரீராம, விஜய ரத ஸாரதே ஸ்ரீராம

பயநாசன ஹரே ஸ்ரீராம, ஹயமுகரூப ஸ்ரீராம

பாகவதப்ரிய ஸ்ரீராம, ஆகமமூல ஸ்ரீராம

நாகஸுசயன ஸ்ரீராம, த்யாகராஜார்ச்சித ஸ்ரீராம