Friday, January 30, 2015

குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை பகுதி 1


.நேற்று (29.01.2015) தைக் கிருத்திகை நாளன்று 
சென்னை கிரோம்பேட்டையில் உள்ள 
குமரன் குன்றத்தில் உள்ள குமரனை தரிசிக்கும்
 பேறு பெற்றேன்.    

அந்த ஆலயத்தைப் பற்றிய விஷயங்களையும், 
நான் எடுத்த புகைப்படங்களையும் உங்களுடன்
 பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி 
அடைகிறேன்.




1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட்டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி, “இது பிற்காலத்தில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்எனக்கூறி அருளாசி வழங்கினார்.

தெய்வத்தின் குரலல்லவா!” அன்று அம்மகான் கூறிய வண்ணம் இக்கோயில் பிரசித்தி பெற்று இன்று விளங்குகிறது.

சென்னைக்கு அருகில் குரோம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் 1 கி.மீ தொலைவில் கிழக்கிலுள்ளது. குமரன் குன்றம் வாயில் வரை சிற்றுந்தும், பேருந்தும் வருகின்றன. ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் என்ற அமைப்பை ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் ஆசியுடன் ஆரம்பித்து, இப் பகுதி வாழ் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் 1976ல் ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மலையடி வாரத்தில் கோயில் கட்டினர். மலைமேல் வேல் ஒன்று கிடைத்தது. அவ் வேலை பக்தர்கள் பலர் பூஜை செய்து வந்தனர்.


09-02-1979ம் ஆண்டு ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை யும் சிறப்பாக நடத்தினர்





03-02-1983ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருக்கரத்தி னால்லகு சம்ப்ரோஷணம்செய்து இக்கோயில் மேலும் வளர ஆசி கூறினார்கள்.
27-01-19991ல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், நவக்கிரகங்கள், இடும்பன் சந்நிதிகள் அமைத்து சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.




ஜகத்குரு சிருங்கேரி சாரதாபீடம் ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் 1995ல் விஜயம் செய்து அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி சந்நிதி விரிவுபடுத்தப் பட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியான மண்டபம் அமைத்து கோபுரம் கட்டப்பட்டது. ஸ்ரீ ஜெயமங்கல தன்ம காளி, சூரியன், சந்திரன், பைரவர், சரபேஸ்வரர் முதலிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 03-05-1998ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜருடன், மாணிக்க வாசகரையும், சிவன் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து 12-06-2005 சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போல் வலது காலைத் தூக்கி ஆடுவது  சிறப்பாகும்.

மேலும் இராஜகோபுரத்திற்கும் ஸ்ரீ விநாயகர் சந்நிதிக்கும் இடையில் கம்பீரமாக மண்டபம் ஒன்றும் எழுந்துள்ளது. இப்புதிய மண்டபம் வழியாக சென்று மலையடிவாரத்தின் தென் புறத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் சந்நிதியையும், வடபுறத் தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதராக ஷண்முகர் சந்நிதியையும் காணலாம். ஸ்ரீ ஷண்முகர் மாமனைப் போன்று சங்கு, சக்ரதாரியாக காட்சியளிப்பது மற்றொரு சிறப்பாகும். மலை ஏற முடியாதவர்கள் கீழிருந்த படியே முருக பெருமானை அடிவாரத்திலிருந்தபடியே வழிபடலாம்.
மலையடிவாரத்தின் தெற்கில் நவக்கிரகங் களுக்கு தனிக்கோயில் உள்ளது. சற்று மேலே சென்றால் புதிதாக இடம் மாற்றம் செய்யப் பட்ட தனிச்சந்நிதியில் இடும்பனை வணங்கலாம்.
அடுத்து நாம் சிவன் கோயிலுக்குச் செல்கின்றோம். இடது புறத்தில் தனிச்சந்நிதியில் அமர்ந்துள்ள ஸ்ரீ சரபேஸ்வரரை முதலில் தரிசித்து செல்வோம். ஸ்ரீ சுந்தரேஸ் வரர் ஆவுடையார் மேல் பாணலிங்கமாக காட்சி தருகிறார். ரிஷப வாகனத்தில் பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை சோமவாரம் கடைசி வாரத்தில் 108 சங்காபி ஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மஹாசிவராத்திரி நான்கு கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவீதி உலா முதலிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.
கருவறையைச் சுற்றி நர்த்தன கணபதியும், ரிஷபாரூடரும் சண்டிகேஸ்வரர் தெற்கு சுவற்றில் ஆலமர் கடவுளாம் தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். மேற்குச் சுவற்றில் மஹா விஷ்ணுவும், விஷ்ணு துர்க்கையும் கோஷ்ட மூர்த்தங்களாக உள்ளனர்.
சிவன் சந்நிதியை அடுத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் சந்நிதி உள்ளது. தனிக்கோயில் அம்பிகையின் கருவறையைச் சுற்றி தெற்கில் மாகேஸ்வரியும், மேற்கில் வைஷ்ணவியும், வடக்கில் பிராம்ஹியும் கோஷ்ட மூர்த்திகளாக உள்ளனர்.
  மாணிக்கவாசகரும் பன்னிரு திருமுறைக் கோயிலும் உள்ளன. ஸ்ரீ நடராஜ ருக்கு வருடத்தில் ஆறுமுறை அபிஷேகம். ஸ்ரீ நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்தில் ஸ்ரீ பைரவர் சந்நிதி உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தையும் அதன் அடியில் உள்ள விநாயகப் பெருமானையும் வணங்கி அப்பகுதியின் அழகைச் சற்று ரசிக்கலாம்.
மகா மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஒரு கையில் தண்டமும் மற்றொரு கரத்தை தொடையில் வைத்தவாறு இரு திருக்கரங்களுடன் ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி உற்சவரையும் அவருக்கு எதிரில் அமர்ந்த நிலையில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ அருணகிரிநாதரையும் தரிசித்து உள்ளே சென்றால் கருவறையை அடையலாம்.



கருவறையினுள்ளே ஸ்ரீ முருகப்பெரு மான் ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி என்ற திருப்பெயருடன் வடக்கு நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தரு கின்றார். வலது திருக்கரத்தில் தண்டம் தாங்கியும் இடது திருக்கரத்தை இடது தொடையைத் தொட்ட வண்ணமும் (ஊருஹஸ்தம்) ஊர்த்துவ சிகை மேல் நோக்கியும் பூணூல் கௌபீனம் தரித்தும் கம்பீரமாக புன்முறுவலுடன் அடியார் களுக்கு அருள்பாலிக்கும் அழகன் முருகனின் அற்புத தரிசனம் கண்டு மன நிறைவு கொள்கிறோம். எதிரில் யானை வாகனம்
.
திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "ஐஸ்வர்ய முருகன்' என்றும் அழைக்கிறார்கள்.

 மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, ஜெயமங்களதன்மகாளி என்றழைக்கப்படுகிறாள்.

தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் சாந்தமாக தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார்.



அடுத்த பகுதியில் நான் எடுத்த மற்ற புகைப்படங்களுடன் 
உங்களை சந்திக்கிறேன்.







1 comment:

  1. அருமையான படங்களுடன் மிக அழகான பதிவு.

    குன்றத்திலே குமரனுக்குக்கொண்டாட்டம் போல அமைந்துள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete