Thursday, September 22, 2016

மகா பெரியவாளின் நகைச்சுவை.







ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம்," மகா விஷ்ணுவும் கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?" என்றார் பெரியவா. வழக்கம்போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

"
விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு, கொசுவும் சக்கரமாய் சுற்றிக்கொண்டுதான் இருக்கு. கெட்டவர்கள் விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு.
[ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"




இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடுஅவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது. "அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான் கொசுன்னு நினைச்சுண்டேன்னா, பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படிஎந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்துவிடும் அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.





















ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும் கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது.உடனே பெரியவா "சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?" என்றார்: "நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...அந்த சாக்கைச் சொன்னேன்!" என்று தமாஷ் பண்ணினாராம்.



Thursday, September 15, 2016


ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர










மகா பெரியவாளின் இந்த PENCIL SKETCH 
திருமதி மஹாலக்‌ஷ்மி விஸ்வநாதன் 
என்பவரால் வரையப்பட்டது.  
இவர் என்  மகள் சந்தியாவின் தோழி.  
நிறைய படங்கள் மிக அழகாக வரைந்துள்ளார்.  முகப்புத்தகத்தில் இவர் வரைந்து வெளியிட்ட பல படங்களைப் பார்த்து வியந்தேன்.  மகா பெரியவாளைப் பற்றி என் வலைத்தளத்தில் எழுதுகிறேன்.   முடிந்தால் அவரை ஒரு படம் வரைந்து கொடுக்க முடியுமா என்று கேட்டதும், உடனே வரைந்து எனக்கு அனுப்பி விட்டார்.
அத்துடன் அவருக்கு சந்தேகம் வேறு “மாமி, படம் சரியாக இருக்கிறதா இல்லை வேறு படம் வரைந்து கொடுக்கட்டுமா என்று கேட்டார்.   “இந்தப் படத்தைப் பார்த்ததுமே என் பேத்தி, ‘உம்மாச்சி தாத்தா’  என்று சொல்லி விட்டாள்.  CHILDREN ARE BEST JUDGES. அதனால் இந்தப்   படமே இருக்கட்டும்” என்று சொல்லி விட்டேன்.   











மகாபெரியவாளின் கருணை




ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை எதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம். அதுமுதல், சகலமும் பெரியவாள் தான் அவருக்கு.

அவரோ திருச்சியில் இருந்தார்; பெரியவாளோ ஊர் சுற்றிகொண்டிருந்தார். எங்கே சந்திப்பது? 

அத்துடன், ஸ்ரீமடம் சிப்பந்திகள் பெரியவாளை தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பார்களோ மாட்டார்களோ?

தையற்காரருக்கு அதிர்ஷ்டம்! பெரியவாள் திருச்சி மலைகோட்டையில் முகாம்!

"நான் டெய்லர். சட்டை, கோட்டு எல்லாம் நல்லா தைப்பேன். சாமிக்கு சட்டை- கோட்டு தெச்சு கொடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைபட்டுகிட்டு இருக்கேன். சாமி அளவு கொடுத்தால் - பழைய சட்டை கூட போதும் - நாளைக்கே புது சட்டை கொண்டாந்திடுவேன். கோட்டு தைக்க, ரெண்டு மூணு நாள் ஆகும்..."

பெரியவாள், பரிவுடன், அவரையே பார்த்துகொண்டிருந்தார்கள். அவர் ஸ்ரீமடத்துக்கு ஏதாவது செய்ய ஆசைபடுகிறார் என்பது, பக்திபூர்வமான அவர் பேச்சிலேயே தெரிந்தது.




"நான் சட்டை - கோட்டு ஒண்ணும் போடுகிறதில்லை. தையலே இல்லாத ஒத்தைத் துணி! மடத்து யானை மேலே அலங்காரமாக போடுகிற மாதிரி, பெரிய துப்பட்டா - நெறைய வேலைப்பாடுகளோட செய்து கொடு..."

டெய்லருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பெரியவாள் அவரை மதித்து, பொருட்படுத்தி, அவர் கோரிக்கையை (கொஞ்சம் மாறுதலுடன்) ஏற்று கொண்டு விட்டார்கள் என்பதை உணர்ந்து புளகாங்கிதம் அடைந்தார்.

நான்கு நாட்கள் கழித்து ஸ்ரீமடத்து யானையின் அளவுக்கேற்ப - இரண்டு பக்கங்களிலும் நன்றாக தொங்கும்படி - வண்ண வண்ண வேலைப்பாடுகளுடன் ஒரு துப்பட்டா கொண்டு வந்து சமர்ப்பித்தார். அதை பிரித்து காட்ட சொல்லி, நுணுக்கமாக பார்த்துவிட்டு, கையை தூக்கி ஆசிர்வதித்தார்கள்.

"பட்டையன் (யானை பாகன்) கிட்டே கொடுத்து இன்னிக்கே போட சொல்லு..."

பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியை தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.




 
Source: Maha Periyavaal Darisana Anubhavangal
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

Thursday, September 8, 2016

மகா பெரியவா மகாத்மியம்




** ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பேச்சுக்களை நேரில் கேட்கும் பாக்யம் கிடைக்காதவர்களுக்கு பயன்படும் விதமாக, அவர்கள் பேசி அருளியுள்ள அனுக்ரஹ வார்த்தைகளை [நான் பல்வேறு புத்தகங்களில் படித்தவற்றை] அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பிரார்த்தித்து வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.**


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்







அண்ணன் எவ்வழி, தங்கை அவ்வழி

குரு எவ்வழி, சிஷ்யை அவ்வழி.



கோபு அண்ணா, நானும் உங்களின் அடிச்சுவட்டைப் 

பின்பற்றி கொஞ்சம் மகா பெரியவாளின் 

அனுக்கிரகத்தை என் வலைத்தளத்தில் பதிய 

ஆசைப் படுகிறேன்.  ஆனால் உங்களைப் போல் ஒரு

 நாள் விட்டு ஒரு நாள் எல்லாம் பதிவது ரொம்ப 

சிரமம்.  அதனால் ஒவ்வொரு வியாழக் கிழமையும் 

வெளியிடலாம் என்று இருக்கிறேன்.      



அத்துடன் மகா பெரியவாளின் ஜென்ம 

நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தன்று 

ஆரம்பிக்கிறேன் உங்கள் ஆசியுடன்.    





ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த

சமயம்பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில்

மகாபெரியவா அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யிலின் கொடுமையைத் 

தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி 

மடத்துக்குள் வந்து தன் வளையல் பெட்டியை 

ஒர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு ஓய்ந்துபோய்

உட்கார்ந்தார். அவருடைய சோர்ந்த முகம் 

மகானின் கண்களில் பட்டது. மடத்து ஊழியர் 

ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே


அழைத்து வரச் செய்தார். மெதுவாக 

வியாபாரியை விசாரித்தார்.





"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி

நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?" 

போன்ற விவரங்களைக் கேட்டார்.


வளையல் வியாபாரி அதே ஊரைச்

சேர்ந்தவர்தான். தன்னுடன் வயதான தனது 

தாயாரும், மனைவி மற்றும் நான்கு குழந்தைகள்

தனக்கு இருக்கிறார்கள் என்றும், கடந்த ஆறு

மாத காலமாக வியாபாரம் மிகவும் மந்தமாக 

இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக இருக்கிறது

என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச் 

சொன்னார்.


அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல் 

வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் 

ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொன்னவர்

அதற்கேற்ற விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும்

எல்லா வளையல்களையும் மொத்தமாக 

வாங்கி, மடத்துக்கு வரும் எல்லா 

சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் 

கொடுத்தால் புண்ணியம். இந்த 

ஏழையிடமிருந்து வாங்கி அவர்களுக்குக் 

கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப் புண்ணிய

கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!" 

என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்

எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து

வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.

அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி 

காலியாக இருக்கவே கூடாது.அந்த 

வளையல்களை அவன் வீட்டுக்கு 

எடுத்துக்கொண்டு போகட்டும்.


பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக

வேஷ்டி, புடவைகளைக் கொடுத்து அவருக்கு

சாப்பாடும் போட்டு அனுப்பும்படி மகான் உத்தரவு

போட்டார்.  இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும்

நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் 

எதிர்பாராத விதமாக உதவியைச் செய்து

விடுகிறார் மகான் என்று அங்கிருந்த பக்தர்கள் 

போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் 

பெண்களுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன.

அதுவும் மகானின் கையால் தொட்டுக் கொடுத்த 

வளையல்கள்.