Wednesday, November 9, 2016


வயிறு போட்ட இரைச்சல்








 தஞ்சாவூர் அருகே சேதிநீபுரம் என்ற கிராமத்தில் பெரியவா முகாம் இட்டிருந்த போது ஒருநாள் திடீரென்று விடிகாலை மூணு மணிக்கே தன்னுடைய பூஜை, ஜபாதிகளை பண்ண ஆரம்பித்து ஒன்பது மணிக்கெல்லாம் முடித்துவிட்டு, உடனே கையோடு பிக்ஷையும் பண்ணிவிட்டார். 

"எல்லாரும் ஒடனே சாப்பிட்டுடுங்கோ....."
என்றார்.

கூட இருந்த சிஷ்யர்களையும் சாப்பிடச் சொல்லிவிட்டார். அவர்களுக்கோ அவ்வளவு சீக்கிரம் மத்யானத்துக்கான சாப்பாடு உள்ளே இறங்கவில்லை. ஏனென்றால் பசிக்கவே இல்லை. இருந்தாலும் பெரியவா சொன்னதும், எதையோ பேருக்கு கொரித்துவிட்டு எழுந்தனர். 

ஆனால், ஏன் இந்த அவசரம்? யாருக்கும் புரியவில்லை....!

திடீரென்று பெரியவா அங்கிருந்து கிளம்பிவிட்டார்.   எட்டுமைல் தூரத்தில் உள்ள வேறொரு இடத்திற்கு ! 

பாரிஷதர்களுக்கோ, அவ்வளவு தூரம் நடந்த அசதி, அதோடு அத்தனை அதிகாலையில் சாப்பிட்டு பழக்கமில்லாததால், கிளம்பும்போது சரியாக சாப்பிடாததால், வயிறு ஏகமாக கூப்பாடு போட்டது 

என்ன செய்வது? பசிக்கு ஏதாவது பண்ணி சாப்பிட்டால் பெரியவா எதுவும் சொல்லப் போவதில்லை என்றாலும், ஏதோ தயக்கம். இனிமேல் ராத்திரி எத்தனை மணி ஆகுமோ? 

குழந்தைகளின் வயிறு போட்ட இரைச்சல்.   
அன்னைக்குத் தெரியாதா பிள்ளையின் பசி.  பெரியவா காட்டிய இந்த மாத்ரு ப்ரேமை.... அம்மாடீ! வார்த்தைகளே இல்லை! அனுபவிப்போம்...

பெரியவா உள்ளே ஒரு தட்டியின் மறைவில் அமர்ந்திருந்தார். தன் பக்கத்தில் இருந்த கட்டுப்பெட்டியை திறந்தார். 

இதோ! தாயினும் சாலப்பரிந்த தயாபரன் உள்ளேயிருந்து மைசூர் பாகு யாரோ பக்தர் குடுத்ததை, தன் சிஷ்யக் குழந்தைகளின் வழிப்பயணத்துக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.   துண்டங்களை தன் திருக்கரத்தால் உதிர்த்து, பக்கத்தில் இருந்த வெள்ளிப் பேலாவில் போட்டார். 

கூடையிலிருந்த நல்ல கனிந்த மாம்பழங்களை துழாவி எடுத்தார். நல்ல ரச மாம்பழங்களைப் பிழிந்து அந்தக் கதுப்பு ரஸத்தை வெள்ளிப் பேலாவில் உதிர்த்து வைத்திருந்த மைசூர்பாகில் விட்டு கலந்தார். 

மதுரமான மைசூர்பாகும், அதி மதுரமான மாம்பழ ரசமும், அதைவிட அதி அதி மதுர மதுரமான அம்மாவின் அன்பான அன்பும், வாத்சல்யமும், அவருடைய திருக்கரத்தின் அம்ருதமும் சேர்ந்து அங்கே அற்புதமான, ஆனந்தமான ஒரு கலவை தயாரானது!

கைகளை அலம்பிக் கொண்டதும், விரல்களால் ஒரு சொடுக்கு! 

சிஷ்யர் வந்தார்!

வெள்ளிக் கிண்ணத்தில் மஞ்சமஞ்சேர்னு சந்தனக் குழம்பாக இருந்த மா-அம்ருதத்தை காட்டினார்.....

"எல்லாரும் எடுத்துக்கோங்கோ!.... ராத்திரி வரைக்கும் தாங்க வேண்டாமா?" 


சிஷ்யர்களுக்கோ..... காதுகளில் மதுரமான பெரியவாளின் சொற்கள்! வாயிலோ மதுரமான ப்ரசாதம்! உள்ளத்திலோ பெரியவாளின் அன்பை தாங்க முடியாத அளவு மதுரமான சுமை! 

 அன்று அந்த அம்ருதத்தை குக்ஷியில் போட்டுக் கொண்ட பாக்யசாலிகளின் வயிறு இனித்துக் குளிர்ந்தாலும், கண்களும் குளமானது. 

பாற்கடல் அம்ருதம் கூட இந்த பேரன்பு ரசத்தின் கால்தூசு பெறுமா?

அவசர அவசரமாக அத்தனைபேரையும் கிளப்பி, சீக்கிரமே அவர்களை சாப்பிடச் சொல்லி, எட்டு மைல் தூரம் நடக்கவிட்டதெல்லாம், "ஆத்மார்த்தமான அன்பு, வாத்சல்யம் என்றால் இதுதாண்டாப்பா! " என்று காட்டத்தான்.. 

மடி கனத்த தாய்பசு, கன்றைக் கண்டதுமே அப்படியே பாலை வர்ஷித்த அனுபவத்தை.... சிஷ்யர்கள் அன்று, கன்றாகிப்  பெற்றார்கள்.




இந்த தாங்கமுடியாத மதுரமான காட்சியின் சுமையை மட்டுமே கடைசி வரைக்கும் நம் இதயத்தில் தாங்கியபடி இருந்தால், வேறென்ன சாதனை வேண்டும்?




Wednesday, November 2, 2016


குல தெய்வம் என்றால் என்ன?
மஹா பெரியவா விளக்கம் !!



மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை.முகமும் இருளடைந்து
போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ”சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு.பேசாமகுடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

மகா பெரியவர் அவரிடம், ”குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். 

”குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர். 

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

'ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார். 

”உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?” 

”ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.” 

”அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.” 

”ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

”அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

”என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?” 


“நான் அப்படிச் சொல்லவே இல்லையே!” 

“அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

”காரணமாத்தான் சொல்றேன்.ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

”அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

'நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, "சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

”சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

”சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?” 

"அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”







அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

"சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து மகா பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கைபிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட!
ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள்.காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

- மகா பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

"ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை."

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

- மகா பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது 




!