Thursday, October 13, 2016

  கல்கண்டு குட்டி






கலியுக வரதன், கண் கண்ட தெய்வமாகிய ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் மஹிமை வானம் போல் பரந்து விரிந்த ஒன்று. அந்த மஹிமையாகிய வானத்தில் வைரம் போல் ஒளிரும் நட்சத்திரம் போன்றது அவரது அருள் லீலைகள். அந்த அருள் விளையாட்டில் பங்கு கொண்டவர் திருமதி சாந்தா.  இந்த மாதரசி பெரியவாளை ப்ரத்யக்ஷ தெய்வமாய் வழிபட்டு வந்தவர்.  இவர் மஹா ஸ்வாமிகளை 'பகவான், பகவான்' என்றே அழைப்பதால் 'பகவான் மாமி' என்றே மடத்தில் அறியப்பட்டவர்.

ஒரு சமயம் பௌர்ணமி அன்று பகவான் மாமி, வீட்டில் பூஜை செய்து நைவேத்ய ப்ரசாதமான பொங்கல், வாழைப்பழம் முதலியவற்றை அருகில் உள்ள அன்பர்களுக்கும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் விநியோகம் செய்து விட்டு உறங்கினார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும்,  ஒரு பையனும் உண்டு. அதில் மூன்றாவது பெண்ணான துர்கா, பூஜை முடியும் முன்பே உறங்கி விட்டதால், ப்ரசாதம் தரவில்லை. ஆனால் மறுநாள் காலையில் எழுந்த உடனேயே தனக்கு ப்ரசாதம் ஏன் தரவில்லை என்று கேட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

அதோடு இல்லாமல் உடனே வாழைப்பழம் வேண்டும் என்றும் அடம் பிடித்தாள். அவளை சமாதானம் செய்ய அன்னை சாந்தாவால் இயலவில்லை. குழந்தை மிகவும் பிடிவாதம் செய்தது. பழம் வாங்க கையில் காசு இல்லை. விவரம் புரியாமல் பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை சமாதானம் செய்ய இயலாமல் பேசும் தெய்வமான 'பகவானிடம்' முறையிட்டு மனம் உருகி வேண்டினார். அந்த சமயத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை துர்கா அருகில் இருந்த மணிபர்சை பார்த்துவிட்டு அதைக் கையில் எடுத்துக் கொண்டு 'நீங்கள் தராவிட்டால் பரவாயில்லை. நனே கடைக்குப் போய் பழம் வாங்கி சாப்பிடுகிறேன்' என்று உற்சாகமாக பர்ஸைக் காட்டினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் 'போ.போ. அந்தப் பர்சை எடுத்துக் கொண்டு போய் பழம் வாங்கு. அதில் நிறைய காசு இருக்கிறது' என்றான். பர்ஸ் காலி என்பதைத் தான் அவ்வாறு பரிகாசம் செய்தான். இதைக் கேட்ட குழந்தை துர்காவிற்கு மேலும் கோபம் அதிகமாகி பர்ஸை தூக்கி எறிந்தாள். கீழே விழுந்த பர்ஸில் இருந்து 'டங்க்' என்ற சப்தம் வந்தது. உடனே ஓடிப்போய் தூக்கி எறிந்த பர்சை எடுத்து திறந்து பார்க்க உள்ளே பெரிய கல்கண்டு இருந்தது. சத்தத்திற்கு காரணம் அது தான். அந்தக் கல்கண்டைக் கண்டதும் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டு "ஐய்யா...எனக்கு உம்மாச்சி தாத்தா 
ப்ரசாதம் கொடுத்துட்டா' என்று கூறிக் கொண்டே கல்கண்டை சாப்பிட ஆரபித்தாள். தாய் சாந்தாவிற்கு ஒரே வியப்பு. காலி பர்ஸில் கல்கண்டு எப்படி வந்தது என்று தெரியவில்லை. மேலும் வீட்டில் கல்கண்டு கட்டியே வாங்கி வைக்காத போது அது மாயமாக எங்கிருந்து வந்தது என்பது ஆச்சர்யம். மஹா மாயனான பெரியவாளே குழந்தையை சமாதானம் செய்ய காலி பர்சில் மாயம் செய்து கல்கண்டை வரவழைத்தார் என உணர்ந்து கண்ணீர் மல்க மஹானின் திரு உருவப்படம் முன்பு மனம் உருகி நன்றி தெரிவித்தார். பின்னர் பெரியவாளின் அருள் விளையாட்டில் விளைந்த கல்கண்டு அது என்பதால் அதை குழந்தை துர்கா மட்டுமின்றி அனைவரும் ஆளுக்கு துளியாவது ப்ரசாதமாக சாப்பிட வேண்டும் என விரும்பி குழந்தையிடம் சென்று கேட்க, குழந்தையோ பிடிவாதமாக தரமறுத்து விட்டது. 'எனக்குத்தான் உம்மாச்சி தாத்தா கொடுத்திருக்கா. நீங்க  எல்லோரும் ராத்திரியே ப்ரசாதம் சாப்பிட்டு விட்டீங்க. நான் தரமாட்டேன்' என்று கூறி தானே உண்டு விட்டது.





இரண்டு நாள் கழித்து குழந்தை துர்காவுடன் சாந்தா காஞ்சிபுரம் சென்று தவமலையை தரிசிக்க வரிசையில் நின்றார். ஒவ்வொருவராக அருள் பாலித்துக் கொண்டு வந்த மஹான் சாந்தாவின் அருகில் நின்ற குழந்தையை காட்டி 'இவ தானே கல்கண்டுக் குட்டி' என வினவ, அதிர்ச்சியில் சிலை போல நின்றாள் சாந்தா. நடந்த எதையும் தான் சொல்லாத் பொழுதே முக்காலமும் உணர்ந்த ஞானி தங்கள் வீட்டில் நடந்ததை எப்படி அறிந்து தெரிவித்தார் என்பது தான். பின்னாளில் துர்கா கவிதை, பாட்டு எழுதியது இந்த அருட்ப்ரசாதத்தால் தான்.