Thursday, January 5, 2017


ஸ்ரீ வேணுகோபால பெரியவா!







காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் சீமா பட்டாச்சாரி அவர்களின் அனுபவம் வேறு யாருக்கும் கிட்டாத பாக்யமாக அமைந்துள்ளது.

வரதர் கோயிலில் பிரும்மோத்ஸவம். ஆறாம் நாள் உற்சவம். பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலனாக சேவை சாதித்து அருளி வீதி வலம் வருகிறார். ஸ்ரீ வேணுகோபாலனாக அதி அற்புத அழகில் சீமா பட்டாச்சாரி பரவசமுறுகிறார்.

பெருமாள் திருவீதிவலம் ஸ்ரீ மடத்தின் எதிரே வந்தடைகிறது. ஸ்ரீமடத்திலிருந்து சாட்சாத் ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவா வெளியே வந்து பக்தி பரவசத்துடன் ஊர்வலம் வந்து நிற்கும் பரமனை தரிசித்து நிற்கிறார்.

சீமா பட்டர் இந்த அரிய காட்சியால் உணர்ச்சி பெருக்கெடுத்து நிற்கிறார். அப்போது அவருக்கு ஒரு அதிசய அனுபவம் ஸ்ரீ வேணுகோபாலனை தரிசித்து நிற்கும் ஸ்ரீ பெரியவாளிடம் அவர் பார்வை சென்றபோது, அங்கே ஸ்ரீ பெரியவாளை இவரால் காண இயலவில்லை. அதற்கு பதிலாக அதே இடத்தில் திரு உலாவரும் ஸ்ரீ வேணுகோபாலன் அலங்கார அழகோடு நிற்பதை தரிசித்து சற்றே சீமா பட்டர் அதிர்ச்சியுறுகிறார். இந்த அற்புதத்தை தாங்க முடியாமல் பட்டர் திணறிபோய் ஸ்தம்பித்து நிற்கிறார். பரவசத்தில் தோய்ந்தவராய் பட்டர் எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி நிற்கிறார்.

இந்த அதி அற்புதம் ஒரு நொடிப் பொழுதில் பட்டருக்கு மட்டும் அருளப்பட்டு மறைகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளே ஸ்ரீ வேணுகோபாலன் என்ற மாபெரும் ரகசியம் பட்டருக்கு இதனால் தெளிவாக அருளப்பட்டுவிட்டது.

இது உண்மைதான் என்பது ஊர்ஜிதமாக சீமா பட்டருக்கு மற்றொரு சம்பவமும் அனுபவமானது. ஸ்ரீ பெரியவாள் தேனம்பாக்கத்தில் அருளிக்கொண்டிருந்த சமயமது. ஒருநாள் பெருமாள் கோயிலிலிருந்து சீமா பட்டரை ஸ்ரீ பெரியவா அழைத்துவர ஆக்ஞையிட்டார்.

சீமா பட்டாசாரியாரும் வந்து நின்று வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி” என்று ஸ்ரீ பெரியவா பட்டரை கேட்டார்.

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானே? இல்லே வரதனுக்கும் தானா?” இப்படி ஸ்ரீ பெரியவா கேட்டதும் பட்டர் வெலவெலத்து போனார்.

ஸ்ரீ பெரியவா தொடர்ந்து கேட்டார் “பெருமாளுக்கு இன்னிக்கு நைவேத்யம் ஏன் செய்யவில்லை?”

இந்த கேள்வியால் பட்டர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய நாக்கு குழறியது “தெரியல்லே…. விசாரிச்சுண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு பட்டர் திரும்பிச் சென்றார்.

அங்கு சென்று விசாரித்தபோதுதான் உண்மை தெரிய வந்தது. கோயிலின் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது தெரிய வந்தது. அதனால் பெருமாளுக்கு நைவேத்யம் செய்யாமல் விடுபட்டுவிட்டிருந்தது.

உடனே பட்டர் அதை சரிபடுத்தி, தக்க பிராயச்சித்தம் செய்து பெருமாளுக்கு அதன்பின்னே திருவமுது படைக்கப்பட்டது. பிரசாதத்தை உடனே ஸ்ரீ பெரியவாளிடம் பட்டர் கொண்டு சமர்ப்பித்தார்.

வரதராஜ பெருமாளுக்கு நைவேத்யம் நடக்கவில்லை என்பது ஸ்ரீ பெரியாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைபடுவானேன்?

இப்படி சீமா பட்டர் சந்தேகமாக நினைக்க வாய்ப்பே இல்லாமல் போனது. சாட்சாத் ஸ்ரீ வேணுகோபாலனேதான் ஸ்ரீ பெரியவா என்ற உண்மையை அனுபவித்த பாக்யம்தான் ஏற்கனவே பட்டருக்கு கிடைத்துள்ளதே!

ஸ்ரீ வேணுகோபாலனாக சீமா பட்டருக்கு காட்சித் தந்த மகான் இன்னும் பல பக்தர்களுக்கும் அவர்கள் இஷ்ட தெய்வங்களாக தரிசிக்கும் பாக்யம் அருளியுள்ளார். பரப்பிரம்ம சொரூபத்தில் அத்தனை தெய்வங்களும் அடக்கமாகின்ற இந்த மேன்மை இயல்பல்லவா?

இப்பேற்பட்ட எல்லாமுமாகி நின்றருளும் நடமாடும் தெய்வமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளிடம் நாம் கொள்ளும் பரிபூர்ணபக்தி நமக்கெல்லாம் சர்வ ஐஸ்வர்யங்களை தந்து சகல மங்களங்களையும் அருளும்!



3 comments:

  1. மூன்று படங்களும் அழகோ அழகு. இன்று வைகுண்ட ஏகாதஸி அன்று மட்டுமே இந்தப்பதிவினைக்காணும் ப்ராப்தம் + பாக்யம் கிடைக்கப்பெற்றேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கணும்.

    >>>>>

    ReplyDelete
  2. இந்தப் பதிவின் பாதி சமாசாரங்கள் மட்டுமே என் தொடரில் வெளியிட்டுள்ள நினைவு உள்ளது.

    http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

    ReplyDelete
  3. அருமையான ஆன்மீகப் பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete